×

தஞ்சாவூர் அருகே சோழர்கால நந்தி, விஷ்ணு சிலை கண்டெடுப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே சோழ்கால நந்தி, விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த சிற்றூர் சித்திரக்குடியை சேர்ந்தவர் முனைவர் சத்தியா. இவரது நிலத்தில் நந்தி சிலை பாதி புதைந்த நிலையில் இருப்பதாக அவர் கொடுத்த தகவலின் பேரில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் தமிழ்பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், அரசு நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு அந்த பகுதியில் நேற்றுமுன்தினம் களஆய்வு செய்தனர். அப்போது அங்கு நந்திசிலை, சேதமடைந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சித்திரக்குடியின் வடபுறத்தே வெண்ணாறு பாய்கிறது. தென்புறம் புதிய கல்லணை கால்வாய் அமைந்திருப்பினும், இவ்வூருக்கு நீர்வளம் சேர்ப்பது கச்சமங்கலம் தடுப்பணையில் இருந்து பிரிந்து வரக்கூடிய ஆனந்த காவிரி வாய்க்கால் ஆகும்.

இந்நிலையில் சித்திரக் குடியில் லிங்கத்தடிமேடு என்று அழைக்கப்படும் வயல் வெளியில் பாதி உடல் பூமிக்குள் மறைந்த நிலையில் ஒரு நந்தி இருப்பதைக் காணமுடிந்தது. இந்த நந்தியானது கி.பி.910ம் நூற்றாண்டு சோழர்காலத்தை சார்ந்ததாக காணப்படுகிறது. நந்தியின் கழுத்தில் மணிமாலை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திமில் இப்பகுதியிலிருக்கும் காளைக்கு உள்ளது போலவே இருக்கிறது.

அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் செல்ல கூடிய ஆனந்த காவிரி வாய்க்காலின் உட்புறத்து தென்புரக்கரையினை ஒட்டியவாறு தலை மற்றும் ஒரு கை உடைந்த நிலையில், இடுப்புக்கு கீழாக பாதி புதைந்த நிலையில் மூன்றடி உயரமுள்ள விஷ்ணு சிலை கண்டறியப்பட்டது. இவை இரண்டும் சோழர்கள் காலத்திய சிற்பங்களாகும். இங்கே ஒரு சிவன்கோயில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயிருக்கக்கூடும்.

பிற்காலத்தில் இந்த இடத்திற்கு சற்று அருகில் கோயில் ஒன்று எழுப்பப்பெற்றுள்ளது. இக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் முன்பகுதியில் கி.பி.8ம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர் கால நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தியின் அடிபீடத்தில் பல்லவர் கல்வெட்டு இரண்டு வரி உள்ளது. இக்கோயில் வளாகத்தில் அச்சுதப்ப நாயக்கர் கால கல்வெட்டு ஒன்றும், பிற்காலத்திய கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இரண்டு கல்வெட்டு செய்திகளும் மத்திய கல்வெட்டு ஆண்டறிக்கையில் வெளிவந்துள்ளது. இவ்வூர் சோழர்கள் காலத்தில் சிறந்து விளங்கியது. சோழர்களுக்கு முன் ஆட்சிசெய்த பல்லவர்கள் காலத்திலும் முக்கிய பகுதியாக இருந்திருப்பதை அறிய முடிகிறது என்றனர்.

The post தஞ்சாவூர் அருகே சோழர்கால நந்தி, விஷ்ணு சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Nandi ,Vishnu ,Thanjavur ,Dr. ,Satya ,Chiturakudi, Chittur ,Boothalur ,Tanjore ,Dinakaran ,
× RELATED சிலைகளால் சிலிர்க்க வைக்கும் கோயில்கள்..!